கருப்பசாமிபாண்டியன் நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தார்.
சென்னை,
அ.தி.மு.க.வில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட கருப்பசாமிபாண்டியன், தனது 25-வது வயதிலேயே 1977-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர், அவருக்கு கட்சியில் நெல்லை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஆலங்குளம், பாளையங்கோட்டை, தென்காசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். கட்சியில் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். இந்தநிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியை விட்டு விலகி தி.மு.க.வில் இணைந்தார்.
தி.மு.க.விலும் அவருக்கு நெல்லை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர், தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, 2015-ம் ஆண்டு கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் 2016-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அ.தி.மு.க.வின் பின்னணியில் இருந்த சசிகலா, டி.டி.வி.தினகரனால் ஓரங்கட்டப்பட்டார். இந்தநிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமையை சசிகலா கைப்பற்றிய நேரத்தில், அக்கட்சியை விட்டு விலகி மீண்டும் 2018-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார்.
தற்போது, தி.மு.க.வை விட்டு விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.